இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, December 31, 2007

வாசனை

புத்தகங்களில் விழுந்து
புத்தகங்களில் எழும் வாழ்க்கை
குடிகாரனாக ஆகும் வரை
போரடிக்கவில்லை.

லக்ஷ்மி மணிவண்ணனோ
விக்ரமாதித்யனோ
வந்து சேராத
நாட்களில்
டாஸ்மாக் கடை ஓரங்கள்
இலக்கிய சர்ச்சையின்றி
ஓய்ந்து கிடக்கிறது
காலி பாட்டிலாய்.

இரவல் சிகரெட் வாங்க போய்
அறிமுகமான தமிழ் வாத்தியார்
தொல்காப்பிய சூத்திரத்தை
ஞாபகப்படுத்தி போகிறார்

வட்டிக்கடை தாண்டி
போகும்போதெல்லாம்
அம்மாவின் தாலிக்குள்
உருண்ட என் படிப்பு
பல்லிளிக்கிறது.

பத்தாவது திருமண நாளுக்கு
மோதிரம் கேட்கும் மனைவிக்கு
இயலாமையே பதில்

இரவில் வீடு போனால்
கட்டியணைக்கும் மகனை
நெஞ்சோடு இறுத்துகிறேன்.

ஓல்டுமங்க் வாசனைப் பார்த்து
முகம் திருப்புகிறான்

அப்பா ஆகும் வரை
அவனுக்கும் தெரியாது
இருளும் வாழ்வும்.

Monday, December 24, 2007

நினைவின் வெளி

உன் சாயலைப்போல் தெரியும்

பெண்களிடமெல்லாம்

ஏதாவது பேசிவிடுகிறேன்.

ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்தில்

உன்னை போலவே தெரிந்த

பெண்ணிடம்பேச நினைக்க

அது நீயாகவே இருந்தாய்

பேசாமலேயே திரும்பினேன்.

........................................................


'நீயில்லையின்னா

செத்துப்போயிருவேன்' என்ற நீ,

உன் கணவனுடனும்

நான் என் மனைவியுடனும்

அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

காதல், கல்யாணத்தில் முடிய

பூக்கட்டிப் பார்த்ததில்

சாதக பதில் தந்த

வடக்குவா செல்வி அம்மன்

அப்படியே இருக்கிறாள்

ஆக்ரோஷமாக.

கோயில் சுற்ற வரும் இளசுகள்

நம்மைப்போலவே இன்றும்

காதலிக்கிறார்கள்

பூக்கட்டுகிறார்கள்.

அம்மனும் தயாராகவே

இருக்கிறாள்

அருள்பாலிக்க.

தமிழ் சிஃபியில் வெளியான என் கவிதை.

Saturday, December 8, 2007

சாமிகள்


பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?
.... ...................

வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.
.........................

எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால் மட்டுமே முடிகிறது
.........................

வேட்டைக்குப்போன
மந்திரமூர்த்தியடித்து
செத்துப்போனாள்
சொல்லமாடனுக்கு ஆடும்
வயித்து பாப்பாவின் மனைவி

.........................

'எனக்கு வல்லயம்செஞ்சு போடுவியா ?'
''திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? '
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் சாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்

.......................

பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

...........................

அருள் வந்து
எல்லோருக்கும் குறி சொல்லும் அம்மா
எனக்கோ அக்காவுக்கோ
சொன்னதேயில்லை

..........................

பூடம் தெரியாமலேயே
சாமி ஆடினான்
புதிதாக அருள் வந்த
அரைக்கொடியான் மகன்.
.......................

ஒவ்வொரு கொடைக்கும்
ஆடுவதற்கு ஆளின்றி
அமைதியாகவே இருக்கிறார்
உள்ளிவிளை சாமி
........................
திண்ணையில் வெளியான எனது கவிதைகள்

Thursday, December 6, 2007

ஆடாக வாழ்தல்


நீ பச்சத்தி மாடனுக்கு
நான் சொல்லமாடனுக்கு
நீ பலியாகும் கோயில்
கீழ்ப்பக்கம் இருக்கிறது
எனக்கு மேல் பக்கம்

வேண்டிக்கொள்வோம்
அடுத்த ஜென்மத்திலாவது
சாமிகள் இல்லாத
ஊரில் பிறக்க.

கனவு புதையும் வீடு

நாள் முழுக்க பீடி சுற்றியும்
3 பண்டல் பாக்கி

களை எடுக்க போன அம்மா
கருக்கலில் வருவாள்.

தம்பி கொண்டு வந்த
சத்துணவு முட்டை
அப்பாவுக்காக காத்திருக்கிறது

ஈரவிறகில் தயாராகிறது சோறு

மேலத் தெரு அக்காள்கள்
கும்மியடிக்க
அழைக்கிறார்கள் தினமும்

கம்பிகள் பெயர்ந்த
ஜன்னலில்
கனவுகளைப் புதைக்கிறேன்

யார் வந்து மீட்பார்களோ?

அப்பா

தடுமாறும் நடை
தொலையாத தூக்குச்சட்டி
மிட்டாய்களும்
காரசேவு பொட்டலமும்
இல்லாத கை
சிரிக்காத முகம்

ஆங்...
அங்கே வருவது
அப்பாதான்

இன்று அவர் குடிக்கவில்லை.

அம்மா

வட்டு ஒட்டவோ
செல்லாங்குச்சி ஆடவோ
கீழ்வீட்டுப் பிள்ளைகளுடன்
‘கொல கொலயா
முந்திரிக்கா’ பாடவோ
தூண்டில் கொண்டு
தெண்டல் பிடிக்கவோ
எப்போதும்
அனுமதிக்காத அம்மா
ஆசையோடு அனுப்புகிறாள்
இன்று.

அடுப்புக்கு அரிசி வரும்வரை
அலைகழியும் தாய் மனசு.

Sunday, December 2, 2007

ஆத்தா

அம்மாவின் வேப்ப மர ஆத்தா
இப்போதும் பயமுறுத்துகிறார்
அருகில் போகும்போது

நள்ளிரவு சாமத்தில்
நொடிச்சான் மகன்
பாம்பு கடித்து
இறந்ததிலிருந்து
அதிகரிக்கிறது
ஆத்தா பற்றிய பயம்.

ஆத்தாவுக்கும்
பாம்புக்குமான உறவு பற்றி
இதுவரை அம்மா சொன்னதில்லை

எப்போதாவது
எதிர்படும் பாம்புகளை
ஆத்தாவாகவும்
வேப்பமரங்களை
பாம்பாகவும் பார்க்கின்ற
குழப்பத்தில்
இரவுகள் நீர்த்துபோகின்றன.

இரண்டு முட்டைகளை திருடி
முந்தா நாள் குடித்ததற்காக
அடிக்கிறாள் அம்மா.
ஆத்தா அடிப்பதாகவே
படுகிறதெனக்கு.

-தினகரன் தீபாவளி மலரில் வெளியான எனது கவிதை

Saturday, November 24, 2007

இரைச்சல்

மவுனம் உறைந்து போகும்

கருப்பு வெயில் நேரத்தில்
மிடறுவிழுங்காத
தொண்டையிலிருந்து
எழுகிறதென்
ஆழ்மன இரைச்சல்

கைகளில் கால்களும்
கால்களில் கைகளுமாக
கோரமாயிருக்கிற உடலில்
மந்திரமூர்த்தியும்
சுடலைமாடனும்
வேண்டி செல்கிறார்கள்

ஆயுதம் சுமக்காத
சிலையாக இருக்கிறேன்
அரிவாள் திணித்துப்
போகிறார்கள் பக்தர்கள்

என்பெயரில் நடக்கத்
தொடங்கும் பலிகளில்
ஆறாவது அறிவை
தேடிச் சலிக்கிறேன்
தொலைந்து போகாத
ஐந்தறிவோடு.

Tuesday, October 9, 2007

புரிதல்

கடைசியாகச் சொல்லிவிடுவதென
முதலில் நினைத்து விடுகிறதென் நீள் மனது

கடைசியைப் பற்றிய சிந்தனையில்
முதலை மறந்துவிடுகிறேன்.

முதலும் இல்லாமல்
கடைசியும் இல்லாமல்
தொடங்குகிறது உரையாடல்

நீ பேசுவது எனக்கும்
என் மவுனம் உனக்கும்
புரியாமலேயே
கேட்பதாக ஆடுகிறது
அனிச்சையானதென் தலை.

புரிவதாயும் புரியாமலும் செல்லும்
வாழ்க்கை போல.