இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, December 31, 2007

வாசனை

புத்தகங்களில் விழுந்து
புத்தகங்களில் எழும் வாழ்க்கை
குடிகாரனாக ஆகும் வரை
போரடிக்கவில்லை.

லக்ஷ்மி மணிவண்ணனோ
விக்ரமாதித்யனோ
வந்து சேராத
நாட்களில்
டாஸ்மாக் கடை ஓரங்கள்
இலக்கிய சர்ச்சையின்றி
ஓய்ந்து கிடக்கிறது
காலி பாட்டிலாய்.

இரவல் சிகரெட் வாங்க போய்
அறிமுகமான தமிழ் வாத்தியார்
தொல்காப்பிய சூத்திரத்தை
ஞாபகப்படுத்தி போகிறார்

வட்டிக்கடை தாண்டி
போகும்போதெல்லாம்
அம்மாவின் தாலிக்குள்
உருண்ட என் படிப்பு
பல்லிளிக்கிறது.

பத்தாவது திருமண நாளுக்கு
மோதிரம் கேட்கும் மனைவிக்கு
இயலாமையே பதில்

இரவில் வீடு போனால்
கட்டியணைக்கும் மகனை
நெஞ்சோடு இறுத்துகிறேன்.

ஓல்டுமங்க் வாசனைப் பார்த்து
முகம் திருப்புகிறான்

அப்பா ஆகும் வரை
அவனுக்கும் தெரியாது
இருளும் வாழ்வும்.

8 comments:

Unknown said...

புத்தாண்டு வாழ்த்துகள்!!

ஆடுமாடு said...

நன்றி. வாழ்த்துகள் தாமோதர் சந்துரு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இந்தக் கவிதையில் ஒருமையில்லை.

முதலில் புத்தகங்களில் ஆரம்பித்து, கவிஞர்களில் மறுபடியும் ஆரம்பித்து, வாத்தியார், அம்மா மற்றும் மனைவியிடம் தொடர்ந்து மகனிடம் முடிகிறது, பிற் சேர்க்கையாய் தத்துவத்தையும் கைகொள்ள முயற்சிக்கிறது...

உணர்ச்சிக் கவிதைகள் இன்னும் கொஞ்சம் ஓர்மையாய் எழுதப் பட வேண்டும்; மட்டுமல்லாது வாசனை என்ற தலைப்பு ஏன்.? மகன் முகம் திருப்புவது 'வாசனையா' அல்லது 'நெடியா'.?

ஆடுமாடு said...

சுந்தர்ஜி நன்றி.

மனம் பிறழ்வது என்ற ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரின் மன நிலையை பொறுத்தே எழுத்தும். ஒருவனின் மனநிலை சிக்கல்களில் இருக்கும் போது, அல்லது ஒரே சிந்தனை இல்லாமல் வேறுவேறு தளத்துக்கு தாவிக்கொண்டிருக்கும் போது எழுத படும் விஷயங்கள் தொடர்பில்லாததாகத்தான் இருக்கும்.
இது ஒரு சிந்தனை. இன்னும் சொல்லப் போனால் இந்த கவிதை இன்னும் தொடர்பில்லாத விஷயங்களைத் தொட்டிருக்க வேண்டும்.

//மகன் முகம் திருப்புவது 'வாசனையா' அல்லது 'நெடியா'.?//

எனக்கு வாசனை, அவனுக்கு நெடி.

இன்னும் பேசலாம்ஜி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பருக்கு,

மனம் பிறழ்வது என்பது வேறு என்று நினைக்கிறேன். அதற்கு வேறு விதமான மொழி நடை வேண்டும். சாதாரண நடையில் பல விஷயங்களைத் தொட்டுச் செல்வது ஒரு உத்தியாக இருக்கலாம்; ஆனால் அது இங்கு சரியாகக் கை கூடவில்லை என்று நினைக்கிறேன்.

மகன் முகம் திருப்புவது அவனது பார்வையில் சொல்கிறீர்கள். அப்போது அது நெடிதான்; வாசனையாகாது அல்லவா.?

ஆடுமாடு said...

டெஸ்ட்ட்

ரமேஷ் வைத்யா said...

நீ யாருன்னு கண்டுபுடிச்சுட்டேன் தம்பியா...

ஆடுமாடு said...

ரமேஷ்ஜி, இது என்ன புதிராய்யா...கண்டுபிடிக்கறதுக்கு.
நானே சொல்றேன்.