இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Monday, January 21, 2008

நினைவுகளைச் சேமிப்பவன்

என் சொற்களைத் திருடும் பாக்கியம் உனக்கிருக்கிறது.
நீ நானாகும் போது எனக்கான சொற்கள் உனக்கானதாக மாறுவதில் வியப்பில்லை.
கூந்தலுக்குள் அழுந்தாமல் வெளியேறும் உன் ஒற்றை முடியில், என் உயிரை தொங்கவிடும் ஆற்றல் பெற்றிருக்கிறாய்.
கருணையில்லா கடவுளர்கள், சக்திகளை பெண்களுக்கே படைப்பதிலான ஓரவஞ்சனையில் எப்போதாவது வெடிக்கக்கூடும் பெரும் போர்.
பார்வை பட்டோ அல்லது பேசியோ திரும்புகிற அதிர்ஷ்ட தருணங்களில் நான்கு முறை இறக்கிறேன். மூன்று முறை பிறக்கிறேன்.
பிறத்தலும் இறத்தலும் உனக்கான கொடூர விளையாட்டு. எப்போதும் நான் தோற்க நினைக்கிற விளையாட்டை உன்னால்தான் நடத்த முடிகிறது.
கைக்குள் காற்றை அடைத்து அதில் நீந்த நினைக்கின்ற மோசக்காரன் நான். நீ காற்றாக இருக்கும் வரை இதுவும் சாத்தியமென்றே நினைக்கிறேன். நேற்றைய கனவில் வந்த யுத்தம் பற்றிய விவாதத்தில் உன் ஞாபகங்களே வென்றன. உன் நினைவுகளை சேமிப்பவனாகவே எப்போதும் இருக்கிறேன். உடலெங்கும் வீங்கி, பிதுங்கிக் கிடக்கும் நினைவின் துறுத்தல்களில் எப்போதாவது தெறிக்கக்கூடும் ஒரு துளி ரத்தம்.
இதுபற்றியான நம் உரையாடல் நிலமெங்கும் சிதறி கிடக்கிறது. கடலை தாண்டவோ, நீந்தவோ தகுதியற்ற என் ஏக்கங்களின் வாய்க்கால்கள், ஆற்றை தொடும் முன்னே முடிந்து விடுவதன் காரணம் மட்டும் புரியவே இல்லை.