இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Saturday, December 8, 2007

சாமிகள்


பிணமெரியாத சுடுக்காட்டுக்கு
வேட்டைக்குப் போகும்
பெரிய சாமி கொண்டுவரும்
எலும்புத்துண்டு யாருடையது ?
.... ...................

வாயைக்கட்டிய சாமிக்கு
மீண்டும் ஆங்காரம் வர
கும்பாபிஷேகம் நடத்தணுமாம்.
தலைக்கட்டுக்கு
ஆயிரம் வரியென விதித்ததில்
வாயைக்கட்டஆரம்பித்தேன் நான்.
.........................

எல்லா பெண்களுக்கும்
குங்குமம் வைக்க
சாமியாடிகளால் மட்டுமே முடிகிறது
.........................

வேட்டைக்குப்போன
மந்திரமூர்த்தியடித்து
செத்துப்போனாள்
சொல்லமாடனுக்கு ஆடும்
வயித்து பாப்பாவின் மனைவி

.........................

'எனக்கு வல்லயம்செஞ்சு போடுவியா ?'
''திருநாத்துக் கொப்பறை
எடுத்து வைப்பியா ? '
பட்றையனை கும்பிடும்போதெல்லாம்
கேட்கிறார் சாமிக் கொண்டாடி.
கோரிக்கை வைக்க போனவன்
கோரிக்கை எற்று திரும்புகிறேன்

.......................

பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.

...........................

அருள் வந்து
எல்லோருக்கும் குறி சொல்லும் அம்மா
எனக்கோ அக்காவுக்கோ
சொன்னதேயில்லை

..........................

பூடம் தெரியாமலேயே
சாமி ஆடினான்
புதிதாக அருள் வந்த
அரைக்கொடியான் மகன்.
.......................

ஒவ்வொரு கொடைக்கும்
ஆடுவதற்கு ஆளின்றி
அமைதியாகவே இருக்கிறார்
உள்ளிவிளை சாமி
........................
திண்ணையில் வெளியான எனது கவிதைகள்

6 comments:

ஆடுமாடு said...

testttt

முபாரக் said...

//பூதத்தாருக்குச் சங்கிலி.
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி.
பலவேசக்காரனுக்கு வீச்சருவா.
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள்.//

மண்மணக்கும் கவிதைகள்.

பாசாங்கற்ற வரிகள். நல்லாருக்கு

ஆடுமாடு said...

முபாரக்ஜி நன்றி.

சத்ரியன் said...

உண்மையிலேயே மண்மணம் வீசும் கவிதைகள்.
இன்னும் நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.

ஆடுமாடு said...

சத்ரியன் ஐயா, நன்றி.

successgopala said...

Hai,
Our manthira moorty create better feature in our life.